• Tue. Apr 16th, 2024

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு தடை விதித்த சிங்கப்பூர்

காஷ்மீரி பண்டிட்கள் மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம், முஸ்லிம்களை கொடூரமானவர்கள் போல் சித்தரித்ததற்காகவும், இதனால் மத அமைதியின்மை ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறி அப்படத்திற்கு சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளது.

விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ கலவையான விமர்சனங்களை பெற்றது.

1980களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதை களமாக கொண்டு தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் வெளியானது.

காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் வெளியேறியதைச் சித்தரிக்கும் இந்தப் படத்தை எடுக்கத் துணிந்ததற்காக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவை பிரதமர் மோடி நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தை இழிவுபடுத்த சதி நடப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டிய நிலையில், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இந்துத்வா அமைப்புகள் படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

மார்ச் 11 அன்று நாடு முழுவதும் வெளியிடப்பட்ட தி காஷ்மீர் பைல்ஸ் படத்தில் அனுபம் கெர், பல்லவி ஜோஷி, மிதுன் சக்ரவர்த்தி மற்றும் தர்ஷன் குமார் ஆகியோர் நடித்திருந்தனர். சில விமர்சகர்கள் மற்றும் எழுத்தாளர்களால் பிரச்சனைக்குரிய அரசியலுக்காக இந்தப் படம் விமர்சிக்கப்பட்டாலும், பாக்ஸ் ஆபிஸில் 330 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்கள் கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளித்ததைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளிடையே இந்தப் படம் விவாதத்தைத் தூண்டியது.

இந்நிலையில் இந்த படத்தை இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளான சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு, அதற்காக அனுமதி கோரி சிங்கப்பூர் அரசிடம் விண்ணப்பித்தது. இந்நிலையில் தி காஷ்மீர் பைல்ஸ் படம் சிங்கப்பூரின் திரைப்பட வகைப்பாடு வழிகாட்டுதல்களுக்கு அப்பாற்பட்டதாக இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இந்த படத்தை வெளியிட அனுமதி வெளியிட அனுமதி அளிக்க முடியாது என, Infocomm Media Development Authority , கலாச்சாரம் சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1989 முதல் 1990 வரையிலான வன்முறைக் காலத்தில் தனது காஷ்மீரி இந்து பெற்றோர் கொல்லப்பட்டதை அறிந்த ஒரு பல்கலைக்கழக மாணவர் சொல்வது போல் உருவாக்கப்பட்டிருக்கும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில், முஸ்லிம்களை ஆத்திரமூட்டும் மற்றும் ஒருதலைப்பட்சமாக சித்தரித்ததற்காகவும், ஹிந்துக்கள் துன்புறுத்தப்படுவதை போல் சித்தரிக்கப்பட்டுள்ளதால் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் படமானது பல்வேறு சமூகங்களுக்கிடையில் பகைமையை ஏற்படுத்தக்கூடும் என்பதாலும், சிங்கப்பூரின் பல் இன மற்றும் பல மத மக்களிடையே சமூக ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *