திருவண்ணாமலை திருப்பெருந்துறை அடியார்கள் குழு மற்றும் தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் சார்பில் திருவண்ணாமலையில் மாதவி பன்னீர்செல்வம் மஹாலில் ஜூலை 25 மற்றும் 26 ஆகிய சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருவண்ணாமலையில் “திருவாசக தெய்வீக மாநாடு”நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு கோவை காந்திபுரத்தில் தனியார் அரங்கத்தில் திருவாசக தெய்வீக மாநாடு அழைப்பிதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சிவ அடியார்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இது சார்பாக திருவண்ணாமலை திருப்பெருந்துறை அடியார்கள் குழு தலைவர் சிவக்குமார் பேசுகையில் :
திருவாசகம் உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், ஜூலை 25 காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை, உலக அமைதிக்காக “திருவாசக எழுத்து ஞான வேள்வி” நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வில் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் 1.20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் திருவாசகத்தை எழுதி பங்கேற்க உள்ளனர்.
இந்த எழுத்து 14 நாடுகள் மற்றும் இந்தியாவின் பல மாநிலங்கள், 16 கல்லூரிகள், 32 பள்ளிகள், ரிஷிகேஷ், கேதார்நாத், பத்ரிநாத், காசி உள்ளிட்ட புனிதத் தலங்கள், பல்வேறு ஆசிரமங்கள் மற்றும் ஆன்மிக மையங்களில் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது.

திருவண்ணாமலையில் நடைபெறும் பிரதான நிகழ்வில் மட்டும் சுமார் 10,000 பேர் அமர்ந்து திருவாசகம் எழுதுவார்கள் என்றும், இரண்டு நாள் மாநாட்டில் 30,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
பங்கேற்பாளர்களுக்கான தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. உலக அமைதி, தேச நன்மை மற்றும் அனைத்து உயிரினங்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் நடைபெறும் இந்த திருவாசக எழுத்து ஞான வேள்வி மற்றும் தெய்வீக மாநாட்டில் ஆன்மிக அன்பர்கள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைப்பு விடுத்தனர்.




