• Fri. Mar 29th, 2024

உடம்பு முடியலனு ஜாமீன்; வெளியே வந்து கிரிக்கெட்டா?

பாஜக எம்பி பிரக்யா சிங் தாகூர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.
பாஜக கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் சாத்வி பிரக்யா சிங் தாகூர். இவர் மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியிலிருந்து 2019ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினராக தேர்வாகினார். இவருக்கு 2008ஆம் ஆண்டு மலேகான் பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்திற்காக இவர் கைது செய்யப்பட்டிருந்தார். 2017ஆம் ஆண்டு இவர் மருத்துவ காரணங்களுக்காக அந்த வழக்கிலிருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அதன்பின்னர் இவர் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் தொடர்பான விழாக்களில் பங்கேற்று வருகிறார். அந்தவகையில் தற்போது இவர் மீண்டும் ஒரு விளையாட்டு விழாவில் பங்கேற்று சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார். இந்த முறை அவர் ஒரு உள்ளூர் கிரிக்கெட் விழாவில் பங்கேற்றுள்ளார். அந்த விழாவில் பங்கேற்று அவர் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இதுதொடர்பான வீடியோ ட்விட்டரில் வேகமாக வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஏனென்றால் அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை கூறிவிட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதன்பின்பு இந்த மாதிரியான விழாக்களில் பங்கேற்று வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று விளையாட்டு நிகழ்வுகளில் அவர் பங்கேற்பது புதிதல்ல.

இதற்கு முன்பாக அவர் கபடி போட்டி மற்றும் கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற வீடியோ வேகமாக வைரலானது. அதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அவருடைய வழக்கு நீதிமன்றத்தில் வரும் போது அவர் தன்னுடைய உடல்நிலையை சுட்டிக்காட்டி விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருகிறார் என்பது போன்றும் சிலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *