• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

காமராஜர் கல்வெட்டு உடைப்பு: செல்வப்பெருந்தகை கண்டனம்

ByP.Kavitha Kumar

Feb 11, 2025

கன்னியாகுமரியில் கர்மவீரர் காமராஜர் உருவம் பதித்த கல்வெட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூர் தொட்டிபாலத்தில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜர் அவர்களின் உருவம் பதித்த கல்வெட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெருந்தலைவர் காமராஜர் மீது அளவற்ற பற்று கொண்டுள்ள அப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இத்தகைய அநாகரீக வன்முறைச்செயலுக்கு காரணமானவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சமீபகாலமாக அப்பகுதியில் மதவாத சக்திகளின் செயல்பாடுகள் அதிகரித்து வருகிற நிலையில் இச்சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லையெனில், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுகிற நிலை உருவாகக்கூடிய வாய்ப்பு உள்ளது.

எனவே, காவல்துறையினர் இந்த கல்வெட்டு உடைப்பு சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். பெருந்தலைவர் காமராஜர் உருவம் பதித்த கல்வெட்டை உடைத்து, சேதப்படுத்தப்பட்டதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். கல்வெட்டு உடைக்கப்பட்ட இடத்தில் மீண்டும் பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவச் சிலையும், கல்வெட்டும் விரைவில் திறக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்