• Thu. Apr 25th, 2024

போதையில் இருப்பவருடன் பயணிப்பவர்களுக்கு ரூ10,000 அபராதம்

ByA.Tamilselvan

Oct 20, 2022

மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்றும் புதிய போக்குவரத்து விதி இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்து மரணங்கள் தமிழகத்தில் தான் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 11,419 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.
இதில், தலைநகர் சென்னையில் மட்டும் 1026 பேர் சாலை விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். சாலை விபத்துகளை குறைக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், புதுப்புது திட்டங்களையும் அமல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் சேர்ந்து பயணிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதன்படி, வாகனம் ஓட்டுபவர் மது போதையில் இருந்து, அவருடன் பயணிப்போர் மது அருந்தி இருந்தாலும், இல்லாவிட்டாலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்படும். இந்த புதிய விதி, ஆட்டோ, கார்களில் பயணிப்போருக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *