• Sat. Apr 20th, 2024

சிறப்பு புலனாய்வுக் குழு கையில் ராமஜெயம் கொலை வழக்கு .. தீர்வு கிடைக்குமா ?

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் வருடம் மார்ச் 29 ல் நடைபயிற்சி சென்ற,தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி – கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோரி ராமஜெயம் மனைவி லதா, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், கொலையாளிகள் யாரும் பிடிபடாத நிலையில், ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட மதுரை உயர் நீதிமன்றம், விசாரணை அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்த்து.

சிபிஐ விசாரணை நடத்தி வந்த நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதையடுத்து கொலை செய்யபட்ட ராமஜெயத்தின் சகோதரர் கே.என்.ரவிசந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில், சிபிஐ விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனபதால் மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என டிஜிபிக்கு மனு அளித்துள்ளதாகவும், அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கு கடந்தமுறை நீதிபதி வி. பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் சீலிடப்பட்ட கவரில் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதி விசாரணை அதிகாரி சரியான கோணத்தில் விசாரித்து வருவதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் என் ஆர். இளங்கோ சிபிஐ விசாரணை அதிகாரியோடு சேர்த்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வழக்கை விசாரித்த நீதிபதி,சிபிஐக்கு உதவ தமிழக காவல்துறை அதிகாரிகள் பட்டியல் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழக காவல்துறை விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும், விசாரணைக்கு உதவ காவல்துறை அதிகாரிகள் பட்டியலை வழங்குகிறோம் என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து நீதிபதி, பட்டியல்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பினை ஒத்திவைத்திருந்தார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கில் நீதிபதி தீர்ப்பு விவரம்: 10 ஆண்டுகளாக சிபிசிஐடி, சிபிஐ விசாரித்தும் கொலைக்கான நோக்கம் கூட கண்டறியப்படாததால், அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றப்படுகிறது. தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார், அரியலூர் டி.எஸ்.பி. மதன், சிபிஐ அதிகாரி ரவி ஆகியோர் அடங்கிய இந்த சிறப்பு புலனாய்வுக் குழு சிபிசிஐடி டிஜிபி சகீல் அக்தர் மேற்பார்வையில் செயல்படும். சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும். 15 நாட்களுக்கு ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *