




பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் குர்பீரித் கவுர் என்ற மருத்துவரை இன்று 2ஆவது திருமணம் செய்து கொண்டார். சண்டிகரில் உள்ள இல்லத்தில் திருமண விழா நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முன்னணி ஆம் ஆத்மி தலைவர்கள் விழாவில் பங்கேற்றனர்.

48 வயதான பகவந்த் மான் ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். முதல் திருமணத்தின் மூலம் பகவந்த் மானிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு மண முறிவு ஏற்பட்டது. இந்நிலையில் 32 வயது மருத்துவரான குர்பீரித்துடன் பகவந்த் மானிற்கு பழக்கம் ஏற்பட்டது. குடும்ப உறவினர்கள் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், இருவரும் காதலித்து தற்போது திருமணம் செய்துள்ளனர்.


இந்த விழாவில் ஆம் ஆத்மி தலைவர்களை தவிர வேறு யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வரலாறு காணாத வெற்றி பெற்று முதல் முறையாக ஆட்சி அமைத்தது. இதைத் தொடர்ந்து பகவந்த் மான் முதல்முறையாக மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். இவரின் தேர்தல் வெற்றிக்கும் மனைவி குர்பிரீத் பின்னணியில் இருந்து உதவி செய்தார் என தகவல் வெளியாகியுள்ளது.

