விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு, நான்கு பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு உள்ளது.

உயிரிழந்த இளைஞரின் உடலுக்குக் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு, அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், வெள்ளக்கோவில் பாளையத்தைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் கார்த்திக் குமார் (25). இவர் கடந்த வியாழக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிர்பாராத விதமாகச் சறுக்கி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்தத் துயரமான சூழலிலும், கார்த்திக் குமாரின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன் வந்தனர்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி தலைமையில், மருத்துவர்கள் குழு தமிழ்நாடு உறுப்புமாற்று ஆணையத்தின் (TRANSTAN) வழிகாட்டுதலின்படி உடல் உறுப்புகளைத் தானமாகப் பெற்றனர்.

தானமாகப் பெறப்பட்ட உறுப்புகள் இதயம் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சாலை மார்க்கமாக விரைவாக அனுப்பி வைக்கப்பட்டது.
ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கே வழங்கப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டது.
உடல் உறுப்பு தானம் செய்த கார்த்திக் குமாரின் உடலுக்கு மருத்துவமனை முதல்வர், இருப்பிட மருத்துவ அதிகாரி, செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



