ஊழலை வேரோடு அகற்ற ஒட்டுமொத்த நடைமுறையும் வெளிப்படையாக ஆக்கப்பட்டுள்ளது. ஊழலில் ஈடுபடும் தனிநபரோ, நிறுவனங்களோ தப்ப முடியாது என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம், 31-ம் தேதி முதல் நவம்பர் 6-ம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடிக்கிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்தியில், “ஊழலை சிறிதும் சகித்துக்கொள்வதில்லை என்ற கொள்கையை கடைப்பிடித்து கடந்த 8 ஆண்டுகளாக இந்தியா நடைபோட்டு வருகிறது.
ஊழலில் ஈடுபடும் எந்த ஒரு தனிநபரோ அல்லது நிறுவனங்களோ தப்ப முடியாது. ஒவ்வொரு கவுரவமான மனிதரும் தங்கள் மீது பெருமை கொள்ளும் நம்பிக்கையான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஊழலை வேரோடு அகற்ற ஒட்டு மொத்த நடைமுறையும் வெளிப்படையாக ஆக்கப்பட்டுள்ளது. இன்று மட்டுமல்ல, வருங்காலங்களிலும் எல்லா மட்டத்திலும் ஊழலுக்கு வாய்ப்பே இல்லை. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் நாடாக, வளர்ந்த நாடாக மாற்றுவது ஒவ்வொருவரின் கடமை ஆகும்” என்று அவர் கூறியுள்ளார்.