கோவையில் வீடு வாங்க விரும்புவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கான மிகப்பெரிய வீட்டுமனை கண்காட்சியான ‘ஃபேர்ப்ரோ 2026’ இன்று கோவை கொடிசியா வளாகத்தில் தொடங்கியது. ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், 40 முன்னணி கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

கிரெடாய் கோவை சார்பில் நடத்தப்படும் இந்தக் கண்காட்சியை, பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் ஹரிதாபூர்ணிமா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிரெடாய் கோவை தலைவர் அரவிந்த்குமார் செயலாளர் சஞ்சனாவிஜயகுமார், பொருளாளர் கார்த்திக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், 100-க்கும் அதிகமான குடியிருப்புத் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள், பாதுகாப்பு வசதியுள்ள குடியிருப்புகள், மூத்த குடிமக்களுக்கான குடியிருப்புகள், உயர்தர மனைகள், ஆடம்பர வீடுகள் மற்றும் முதலீட்டுக்கான சொத்துகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் ஒரே இடத்தில் பார்வையிட்டு தேர்வு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முன்னணி வங்கிகளும் பங்கேற்றுள்ளதால், வீட்டுக் கடன் திட்டங்களை ஒப்பிட்டு பார்க்கவும், உடனடி நிதி ஆலோசனைகளைப் பெறவும், தங்களுக்கு ஏற்ற கடன் திட்டத்தைத் தேர்வு செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது.






