தேவர் குருபூஜையை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முழுவதும் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது,”என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு கூறினார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 115 வது ஜெயந்தி மற்றும் 60வது குருபூஜை விழா நாளை (அக்.30) நடக்கிறது அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் மரியாதை செலுத்த உள்ளனர். இதையடுத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து டி.ஜி.பி.,. சைலேந்திரபாபு நேற்று மாலை ஆய்வு செய்தார். பின்னர் பசும்பொன் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறை மற்றும் ட்ரோன் கேமராக்களை பறக்க விட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது.. முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில் தென் மண்டல ஐ.ஜி.,அஸ்ரா கர்க் தலைமையில் 5 டி.ஐ.ஜி.,க்கள், 34 எஸ்.பி,க்கள் உட்பட 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பசும்பொன்னில் 1000 போலீசார் இப்பணியில் ஈடுபடுகின்றனர். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டும் பொதுமக்கள் வந்து செல்ல வேண்டும்.
கமுதி, பசும்பொன் பகுதிகளில் கண்காணிக்க மட்டும் அதிநவீன 95 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை சென்னையில் இருந்து கண்காணிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது, என்றார். தென்மண்டல ஐ.ஜி.. அஸ்ராகர்க்,டி.ஐ.ஜி., மணிவண்ணன், எஸ்.பி.,தங்கதுரை உடன் இருந்தனர்.