விருதுநகர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பட்டாசு ஆலைகளில் தொடர் ஆய்வு நடத்தப்பட்டு சுமார் 200 ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு பதினைந்து ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

இந்நிலையில் தொடர்ந்தும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி பட்டாசு ஆலைகளை மூடும் நடவடிக்கையை கண்டித்தும், ஆய்வின் போது மூடப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளை காலம் தாழ்த்தாமல் திறந்திட வலியுறுத்தி சிவகாசி அருகே விஜயகரிசல்குளத்தில் வெம்பக்கோட்டை பகுதி பட்டாசு கூலி தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பங்கேற்று மூடப்பட்ட பட்டாசு ஆலைகளை உடனடியாக திறக்க வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் (திமுக) கடற்கரை ராஜ் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார், அப்போது, கடந்த திமுக ஆட்சியில், சாத்தூர் ராமச்சந்திரன் அதிகாரிகளிடம் பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த வேண்டாம், கண்டும் காணாமலும் இருந்து கொள்ளுங்கள் என வலியுறுத்தியதாகவும், தானும் அப்படித்தான் கூறுவேன், அதனால் பெரிய அளவில் பட்டாசு தொழிலாளர்கள் பாதிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

மேலும் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்தும் பாதிப்பை சரி செய்வது குறித்தும் சட்டசபையில் நிச்சியம் குரல் கொடுப்பேன் என உறுதியளித்தார்.
ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் பசும்பொன் மக்கள் தேசம் கட்சி தலைவர் இசக்கி ராஜா ,அம்மா மக்கள் முன்னேற்ற கழக விருதுநகர் மாவட்ட செயலாளர் பயில்வான் சந்தோஷ் குமார், தமிழன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள், பட்டாசு ஆலை உரிமையாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.





