குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழப்புக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 8ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது. இதில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில், விமானப்படை கேப்டன் வருண் சிங் 80 சதவீதம் உடல் எரிந்த நிலையில் பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இதனால், ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, குரூப் கேப்டன் வருண் சிங் மரணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளதாவது; ”நாட்டிற்காக பெருமையுடன் பணியாற்றினார் குரூப் கேப்டன் வருண் சிங். அவருடைய மரணச் செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். அவருடைய சேவையை இந்த நாடு என்றும் மறக்காது. அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.