தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கோரி விண்ணப்பித்தார். பாஸ்போர்ட் புதுப்பித்து வழங்கப்பட்ட நிலையில், 2017ம் ஆண்டு திருநெல்வேலியில் பதிவான வழக்கை மறைத்ததாக கூறி, அவரது பாஸ்போர்ட் திரும்பப் பெறப்பட்டது.
சமீபத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக துபாய் சென்றுள்ள நிலையில் அவருக்கு உடனிருந்து உதவி செய்வதற்காக, துபாய் செல்ல ஏதுவாக பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க கோரி பிரேமலதா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்த போது, பிரேமலதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், திருநெல்வேலி காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்து எந்த ஒரு சம்மனும் வரவில்லை என்றும், வழக்கு தொடர்பாக எந்த தகவலையும், மறைக்க வில்லை என்றும், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாகவும், எங்கும் தப்பிக்க போவதில்லை என்றும் வாதிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி மகாதேவன், பிரேமலதாவின் பாஸ்போர்டை உடனடியாக திரும்ப வழங்குமாறு மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாகவும், வெளிநாடு சென்று வரும் தேதியை பாஸ்போர்ட் அதிகாரியிடம் தெரிவிப்பதாகவும், எங்கும் தப்பிக்க போவதில்லை என உறுதி அளிக்க பிரேமலதாவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளார்.