தேனி மாவட்டம் ஆண்டிபட்டி முதல் கொச்சின் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் முத்தனம்பட்டி அருகே கட்டப்பட்டு வரும் பாலம் வேலைகள் முடிவடைவதற்கு முன்பாகவே விரிசல் ஏற்பட்டுள்ளது .
இதனால் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ள நிலையில் , மூல வைகை ஆற்றில் கண்டமனூரில் இருந்து வரும் கால்வாய் நீரும் ,ஆண்டிபட்டி மேற்கு தொடர்ச்சி மலை நாகலாறு ஓடையில் இருந்து வரும் நீரும் இணைந்து ‘இப்பகுதியில் உள்ள பல கண்மாய்களுக்கு நீர் வருவதற்கு பயன்பட்டு வந்தது. கால்வாய் வழியாக வரும் தண்ணீர் முத்தனம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிறு குழாய்கள் வழியாகவே இதுவரையிலும் வந்துகொண்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியின்போது பெரிய பாலம் அமைத்து, அதன் அடியில் தண்ணீர் செல்வதற்காக ராட்சத குழாய்கள் பதிக்க டெண்டர் விடப்பட்டது .இதனை தேனில் உள்ள முன்னணி நிறுவனமான கேஎம்சி கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தார் டெண்டர் எடுத்து பணிகளை செய்து வந்தனர். மெதுவாக நடைபெற்ற இந்தப் பணியால் பல மாதங்களாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றுப்பாதையில் விடப்பட்டது .
தற்போது திமுக ஆட்சி தொடர்ந்து 100 நாட்கள் கடந்தும் இன்னும் முழுமையான வேலைகள் முடியவில்லை எனவும் பாலத்தில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர். கேரளா வரை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலை பகுதி என்பதால், எப்போதும் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.
இத்தகைய பிஸியாக உள்ள சாலையில் இதுபோன்ற அஜாக்கிரதையான பணிகளால் விபத்துகளும் ,உயிர் பலியும் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனே இப்பகுதியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சில தினங்களுக்கு முன்பு மதுரையில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்து தொழிலாளி ஒருவர் மரணமடைந்த விவகாரம் போல நடக்ககூடாது என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்