• Sat. Apr 20th, 2024

மதுரையில் மக்கள் பிரதிநிதிகள் இன்று பதவியேற்பு!

Byகுமார்

Mar 2, 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கடந்த பிப்ரவரி 19ம் தேதி தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி நடை பெற்று முடிந்த நிலையில், திமுக 67 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், சிபிஎம் 4 இடங்களிலும், மதிமுக 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 15 இடங்களிலும், விசிக, பாஜக தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இன்று மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் முன்னிலையில் இன்று நடைபெற்றது. தேர்வு செய்யப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும் உறுதிமொழியுடன் பதவியேற்றுக் கொண்டனர். உறுதிமொழி ஏற்றுக் கொண்ட பெரும்பாலான உறுப்பினர்கள் ‘உளமாற’ ‘கடவுளறிய’ என்று கூறி பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது. திமுகவைச் சேர்ந்த சில மக்கள் பிரதிநிதிகள் அக்கட்சியின் தலைவர் மறைந்த கருணாநிதியின் பெயரை சொல்லி பொறுப்பேற்றுக் கொண்டனர். அதேபோல் அதிமுகவைச் சேர்ந்த பிரதிநிதிகள் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஜெயலலிதா பேரை சொல்லியும், அதேபோல் பாரதிய ஜனதா கட்சியின் கவுன்சிலர் பாரத் மாதா கி ஜே என்றும், சுயேச்சை அஞ்சாநெஞ்சன் அழகிரி தளபதி ஸ்டாலின் முதல்வர் என்று கூறியும் பதவி ஏற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *