பணத்துக்கு விலை போனவர்கள்தான் இபிஎஸ் பின்னால் உள்ளனர்’ ஓபிஎஸ் நியமித்த மாவட்ட செயலாளர்கள் பேச்சு
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும், ஓ.பன்னீர்செல்வம் தன்னை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்றே அடையாளப்படுத்தி வருகிறார்.இந்நிலையில் நேற்று, புதிதாக 14 மாவட்டச் செயலாளர்களை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டிருந்த நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர்கள், ‘இணை ஒருங்கிணைப்பாளருக்கு வேலை இல்லை என்று முடிவெடுத்து எடப்பாடி பழனிசாமியை கட்சியைவிட்டு நீக்கிவிட்டோம். அதனால், அவரைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை.கட்சியே எங்களுடையது எனும் போது, நாங்கள் ஏன் போட்டி பொதுக்குழு நடத்த வேண்டும்..?; ஓ.பன்னீர்செல்வம் பின்னால் ஒன்றரை கோடி உண்மை தொண்டர்கள் உள்ளனர்; ஆனால், பணத்துக்கு விலை போனவர்கள்தான் எடப்பாடியார் பின்னால் உள்ளனர்’ எனத் தெரிவித்தனர்.