கழுகுமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவில்பட்டி தாலுகா தலைவர் சிவராமன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் லெனின்குமார் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து 2021 ம் ஆண்டு பயிர்காப்பீடு செய்து விடுபட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும். கூட்டுறவு கடன் சங்கங்களின் பயிர் கடன் தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும். நடப்பு பருவத்திற்கான விதை மற்றும் உரம் அனைத்தையும் கூட்டுறவு சங்கம் மற்றும் வேளாண் துறை டெப்போக்கள் மூலம் விவசாயிகளுக்கு எளிதாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகத்தில் போலியான பத்திர பதிவு களை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர்கள் சங்கரலிங்கம், எட்டப்பன், சிபிஐ கயத்தார் ஒன்றிய துணை செயலாளர் ராமலிங்கம், சிபிஐ மாதர் சங்கம் அந்தோணியம்மாள், கரடிகுளம் சிதம்பரம், கெச்சிலாபுரம் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவில்பட்டி தாலுகா தலைவரும், கழுகுமலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளருமான சிவராமன் செய்திருந்தார்.