5720 திருக்கோயில்களில் கனிணி வழி வாடகை வசுல் மையங்கள் துவங்கப்படவுள்ளது. 1492 திருக்கோயில்கள் மூலமாக நவம்பர் 1 முதல் 30 வரை ரூ 21 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார்.
திருக்கோவில் நிலங்களின் வாடகைத் தொகையினை முறையாக வசூல் செய்யவும், ஒளிவு மறைவு அற்ற வகையில் அமையும் வண்ணம் கேட்பு, வசூல், நிலுவை விவரம் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருக்கோவில் நிலங்களின் வாடகைதாரர்/ குத்தகைதாரர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வாடகை, குத்தகைத் தொகையினை இணையதளம் வாயிலாகவே செலுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு அறிக்கையில், 5720 திருக்கோயில்களில் கனிணி வழி வாடகை வசுல் மையங்கள் துவங்கப்பட்டு 1492 திருக்கோயில்கள் மூலமாக நவம்பர் 1 முதல் 30 வரை ரூபாய் 21 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 1 முதல் 15 தேதி வரை ரூபாய் 10 கோடி வசூல் செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ. 21 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வாடகை நிலுவை தொகையும் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கணினி மூலம் வாடகை/குத்தகை செலுத்த இயலாத குத்தகைதாரர்/வாடகைதாரர்கள் வழக்கம் போல் திருக்கோயில் அலுவலகத்தில் தொகையை செலுத்தி கணினி மூலம் ரசீதினை பெற்றுக்கொள்ளலாம். வாடகை வசூல் மையம் அமைக்க இயலாத நிலையில் உள்ள கோயில்களில் வாடகை செலுத்த விரும்புவோர் அருகில் உள்ள பெரிய திருக்கோயில்களில் அமைந்துள்ள பொது வசூல் மையத்தில் கேட்பு தொகையினை செலுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இம்முறையைப் பின்பற்றுவதன் வசூல் முறையாக நடக்கிறதா என்பதனை தொடர்ந்து கண்காணித்து, முறையாக பணம் செலுத்தாத நபர்களின் விவரங்களையும் இணைய வழியாக தெரிந்து கொள்ளலாம். இதன்மூலம் நிலுவை தொகையினை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.