• Sat. Apr 20th, 2024

இனி உணவு பரிமாறும்போது தலையில் தொப்பி, கைகளில் கையுறை அணிய வேண்டும்…

Byகாயத்ரி

May 7, 2022

கேரள மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலியானதை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் ஷவர்மா மற்றும் அசைவ உணவுகளின் தரத்தை கண்டறிய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் மாநகர பகுதியில் கடந்த 2 நாட்களாக தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது:-

நாகர்கோவில் மாநகர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக அசைவ ஓட்டல்கள் மற்றும் ஷவர்மா விற்பனை நிலையங்களில் உணவின் தரம் குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில், இது வரை 32 ஷவர்மா கடைகளிலும், 4 அசைவ உணவகங்களிலும் சோதனை நடைபெற்றது. இதில், தரமற்ற 5 கிலோ இறைச்சி மற்றும் ஷவர்மா வைக்க பயன்படுத்தப்படும் குக்கூஸ் (வெள்ளை நிற ரொட்டி) 50க்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஷவர்மா கடைகளில் உணவு பொருட்களை கடைக்கு வெளியே வைக்க கூடாது. குறிப்பாக தூசி, புழுதி படும் வகையில் திறந்த நிலையில் வைக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.அசைவ கடைகள் கண்டிப்பாக உரிமம் பெற்று தான் செயல்பட வேண்டும்.மேலும், அசைவ உணவுகள் மூலம் நோய் பரவாமல் தடுக்கும் விதமாக அசைவ உணவுகளை 70 சென்டிகிரேட் வெப்பத்தில் வேக வைக்க வேண்டும்.மேலும், இறைச்சியை தொட்டு உண்ண பயன்படுத்தப்படும் மைனஸ் அன்றன்று தயாரிக்க வேண்டும். முந்தைய நாள் மைனஸ் பயன்படுத்த கூடாது. ஷவர்மா தயாரிக்க பயன்படும் குக்கூஸ் உரிமம் பெற்ற நிறுவனத்திடம் இருந்து பெற்று பயன்படுத்த வேண்டும். மேலும் உணவு பரிமாறுபவர்கள் தலையில் தொப்பி, கைகளில் கையுறை அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் உணவின் தரம் தொடர்பான புகார்களுக்கு 9444042322 என்ற எண்ணை அழைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *