பேனர் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதால் அடிக்கடி உயிற்பலிகள் நிழ்ந்து வருகிறது. சமீபத்தில், விழுப்புரத்தில் அமைச்சரை வரவேற்பதற்காக சாலையில் தி.மு.க. கட்சி கொடி நடும்போது, சிறுவன் பிடித்த இரும்பு கொடி கம்பம் மின் கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கியதால் சிறுவன் உயிரிழந்தான்.
இனிமேல் இதுபோன்றதொரு மரணம் நடைபெறக் கூடாது என உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேனர் வைப்பதில் விதிமீறி செயல்படுபவர்களுக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி விளக்கமளித்தது. தொடர்ந்து தி.மு.க வழக்கறிஞர், முதல்வர் பதவியேற்றபோது கூட பேனர்கள் வைக்கப்படுவது தவிர்க்கப்பட்டதாக வாதிட்டார்.
பின்னர் நீதிபதிகள் கூறுகையில்,சட்டவிரோத பேனர் வைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆளுங்கட்சி மட்டுமல்லாமல், அனைத்து கட்சிகளையும் சேர்த்தே குறிப்பிடுகிறோம். பேனர் வைக்கும் நிகழ்ச்சிகளில் முதல்வர் கலந்து கொள்வதில்லை என்றால் மட்டும் போதாது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோதமாக பேனர் வைக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றனர்.