• Thu. Apr 25th, 2024

பிரதமர் மோடிக்கு நீரஜ் சோப்ரா வழங்கிய ஈட்டி ரூபாய் ஒன்றரை கோடிக்கு ஏலம்..!

Byவிஷா

Oct 9, 2021

பிரதமர் நரேந்திர மோடி தான் பெற்ற பரிசுப் பொருட்களை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியை அரசின் திட்டங்களுக்கு வழங்கி வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 1,300க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்களை ஏலம்விட இணையதளம் வாயிலாக நடத்தப்படும் என்றும் ஏலத்தில் பங்கேற்போர் இணையதளம் மூலம் அக்டோபர் 7ம் தேதி வரை பங்கேற்கலாம் எனவும் மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவித்திருந்த நிலையில், இந்த மின்னணு ஏல முறை கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கப்பட்டது. மேலும், ஏலத்தின் மூலம் கிடைக்கும் நிதி கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் ~நவாமி கங்கா| திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜப்பானில் நடந்து முடிந்த ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள், போட்டிகளில் தாங்கள் பயன்படுத்திய உபகரணங்களை பிரதமர் மோடிக்கு வழங்கினர். இது மட்டுமல்லாமல் பிரதமர் மோடிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட சிற்பங்கள், ஓவியங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் ஏலம் விடப்பட்டன.
இந்நிலையில் ஏலத்தில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பல பரிசுப் பொருட்களை ஏலத்தில் எடுக்க ஆட்கள் முன்வரவில்லை. அதேசமயம், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வழங்கிய பாட்மிண்டன் ராக்கெட் ரூ.80 லட்சத்துக்கு அடிப்படை விலை வைக்கப்பட்டது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் மோடி இருப்பது போன்ற ஓவியம் ரூ.3.50 லட்சத்து அடிப்படை விலை வைக்கப்பட்டது. இந்த இரு பொருட்களும் ஏலம் எடுக்கப்படவில்லை.
ஒலிம்பிக் குத்துச்சண்டை வீராங்கனை லாவ்லினா போர்கோகெயின் பயன்படுத்திய கிளவுஸ் ரூ.80 லட்சத்துக்கும், ஆடவர், மகளிர் ஹாக்கி வீராங்கனைகள் பயன்படுத்திய அவர்கள் கையொப்பமிட்ட ஹாக்கி மட்டைகள் ஒவ்வொன்றும் ரூ.80 லட்சத்துக்கு ஏல அடிப்படைத் தொகையாக வைக்கப்பட்டது. ரூ.5000 முதல் ரூ.90 லட்சம் வரை அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்ட பல பொருட்களை வாங்க மக்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. ஒவியங்கள், புகைப்படங்கள், பிரதமர் மோடி தனது தாயுடன் இருக்கும் புகைப்படம் ஆகியவையும் விற்பனையாகவில்லை.

மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அதிகபட்சமாக சர்தார் படேல் சிலைக்கு 140 பேர் ஏலம் கேட்டிருந்தனர். மரத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை 117 பேரும், புனே மெட்ரோ ரயில் நினைவுப் பரிசை 104 பேரும், விக்டரிசின்னத்தை 98 பேரும் ஏலம் கேட்டிருந்தனர்.
அதிகபட்சமாக ஒலிம்பில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் ஈட்டி ரூ.1.50 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டது. பவானி தேவியின் கத்தி ரூ.1.25 கோடிக்கும், சுமித் அந்திலின் ஈட்டி ரூ.1.02 கோடிக்கும் ஏலம் கேட்கப்பட்டது. டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் கையொப்பமிடப்பட்ட அங்கவஸ்திரம் ரூ.1 கோடிக்கும், குத்துச்சண்டை வீராங்கனை லாவ்லினா போர்கோகெயின் க்ளோவ் ரூ.91 லட்சத்துக்கும் ஏலம் எடுக்கப்பட்டது| எனத் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *