• Sun. Feb 9th, 2025

திகு திகு திருப்பரங்குன்றம்: 50-க்கும் மேற்பட்ட இந்து அமைப்பினருக்கு தடுப்பு காவல்

ByIyamadurai

Feb 4, 2025

திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 50-க்கும் மேற்பட்ட இந்து அமைப்பினர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் மலைமீது காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் தர்காவில் தினந்தோறும் ஏராளமானோர் வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆனால், கடந்த சில நாட்களாக மலைமீதுள்ள தர்காவில் ஆடு மற்றும் கோழியை உயிர்பலி கொடுக்கக் கூடாது என இந்து அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் இன்று போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி அமைப்பு அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து உள்ளனர்.

இதன் காரணமாக இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் இடையே அசாதாரண சூழல் நிலவுவதால், மதுரையில் வெளிநபர்கள் பிரவேசிக்காத வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நேற்றும், இன்றும் மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது அமைதியை சீர் குலைக்கும் வகையில் போராட்டங்கள், தர்ணா மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறை இறங்கியுள்ளது. அதன்படி, இந்து முன்னணியின் மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன், விஸ்வ இந்து பரிஷத் பொறுப்பாளர் ஏ.எம் பாண்டியன், தனியார் விடுதிகளில் தங்கி இருந்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியினர் மற்றும் இந்து அமைப்பினர் என மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்டோரை தடுப்பு காவலில் காவல்துறையினர் வைத்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.