தமிழகத்தில் அம்மா உணவகங்கள் 2013 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. இது சென்னை, மதுரை உள்ளிட்ட பல மாநகராட்சிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரை ஜெய்ஹிந்த்திபுரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் நேற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்துடன் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படம் இடம் பெற்றிருந்தது. இதனால் பெரும் சர்ச்சை உருவாக்கியது.
ஏற்கனவே இந்த உணவகத்தில் பழைய பணியாளர்களை நீக்கிவிட்டு திமுகவிற்கு சாதகமான பணியாளர்களை நியமிக்கதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், விளம்பரப்பட விவகாரத்தால் மேலும் சர்ச்சையை சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் செய்தி வெளியாகி ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மாநகராட்சிகளிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் மட்டுமே இடம் பெற்றிருந்தது, தற்போது திமுக ஆட்சியில் இருக்கும் நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தையும் திமுகவினர் இடம்பெறச் செய்துள்ளனர். இதனால் அதிகாரிகள் விளம்பரப் பலகை அகற்றுவதில் குழப்பமடைந்தனர். படத்தை அகற்றினால் தங்களுக்கு பிரச்சினைகள் ஏதும் ஏற்படுமோ என்ற அச்சத்தில் நேற்று முழுவதும் அகற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனையின்பேரில் பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் மட்டும்தான் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி அம்மா உணவகங்களில் இடம்பெற்றுள்ளது. தற்போது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படமும் திமுகவினரால் வைக்கப்பட்டதால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தற்போது திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருக்கும் பட்சத்தில் இதனை அகற்றினால் முதல்வர் ஸ்டாலின் கோபத்திற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படுமோ என்ற அச்சத்தில் நேற்று வரை படம் அகற்றப்படவில்லை.
திமுகவினர் ஆட்சிக்கு வந்ததும் அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கியது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு திமுகவினரை கண்டித்தார், அதேபோல தற்போது சென்னையில் மழை கொட்டி வரும் நிலையில் அம்மா உணவகங்கள் இலவச உணவு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இதுபோன்று முதல்வர் ஸ்டாலின் பாரபட்சமின்றி செயல்படுவதால் அதிகாரிகளுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இருக்காது என்று முடிவெடுத்து தான் விளம்பரப் பலகையை அகற்றியுள்ளோம் என்றார்.