

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நேரடி ஒளிபரப்பு ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பாக கீழ ரத வீதி தேரடியில் நகர் மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

தமிழக சட்டசபையில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்து விவாதங்கள் நடைபெற உள்ளது. நிதி நிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நிகழ்வினை அனைத்து தரப்பினரும் அறியும் வகையில் மாநகராட்சிகளில் பொதுமக்கள் கூடும் பகுதிகளில் தலா இரண்டு இடங்களிலும், நகராட்சிப் பகுதியில் தலா ஒரு இடத்திலும் LED திரை அமைத்து மக்கள் நிதிநிலை அறிக்கையினை அறிந்து கொள்ளும் வகையில் உரிய ஏற்பாடு செய்யுமாறு அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளையும் நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு கேட்டுக் கொண்டுள்ளார் .

அதன் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கீழ ரத வீதி தேரடியில் எல் இ டி திரை அமைக்கப்பட்டு பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் . இருக்கைகள், நிழற்பந்தல் மற்றும் குடிநீர் வசதி ஆகியவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன் தலைமையில் ஆணையாளர் பிச்சைமணி, உதவி பொறியாளர் நாகராஜன், குடிநீர் வினியோக மேற் பார்வையாளர் ஜெயராஜ், சுகாதார ஆய்வாளர் சந்திரா உட்பட நகராட்சி அதிகாரி பார்வையிட்டனர்.

