கொல்கத்தாவில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காள மாநிலம், தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. மேற்கு வங்காளத்தில் ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம் என மருத்துவர்கள் போராடினர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு சமூக அமைப்புகளும் களத்தில் இறங்கின. மறுபுறம் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டக்களத்தில் குதித்தன.
இந்த கொடூரத்தை ஏற்படுத்திய சஞ்சய் ராய் என்ற தன்னார்வலர் கைது செய்யப்பட்டார். அந்த மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கடி வந்து செல்லும் பெண் மருத்துவர் தனியாக இருப்பதைப் பார்த்து இந்த கொடூரத்தை அரங்கேற்றி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய கொல்கத்தா உயர் நீதிமன்றம், ,வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்தது. அதைப்போல இந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்த உச்ச நீதிமன்றம், பல்வேறு உத்தரவுகளை மாநில அரசுக்கு பிறப்பித்தது. இந்த வழக்கு சியல்டா மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன.கடந்த 9-ம் தேதியுடன் விசாரணை முடிவடைந்தது. அத்துடன் நேற்று முன் தினம் தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி. பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்த கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிபதி அனிர்பன் தாஸ் தீர்ப்பு வழங்கினார். அவருக்கான தண்டனை விவரம் இன்று வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்த நிலையில் அவருக்கான தண்டனை விவரத்தை சியல்டா நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சஞ்சய் ராய்க்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.17 லட்சம் வழங்க மேற்கு வங்காள அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது-