தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது.வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்னி நட்சத்திரம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4ம் தேதி தொடங்கி 25 நாட்கள் நீடிக்கும். இந்த நாட்களில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் என்பது அதிகமாக காணப்படும். குறிப்பாக, தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெப்பம் உச்சத்தை தொடும்.
அந்த வகையில் இந்தாண்டு மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் மக்களை வாட்டி வதைத்தது. தமிழகத்தில் சில இடங்களில் வெயில் 105 டிகிரியை தாண்டி பதிவாகியது.
இந்நிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைய உள்ளது. இதனால் வெப்பம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.