• Sat. Apr 20th, 2024

ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டி

ByA.Tamilselvan

Jun 8, 2023

ஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ஆளுநர் அரசியல் கட்சி பிரதிநிதி போல பேசி வருவதாகவும், அதிமுகவை நம்பினால் மட்டுமே பாஜக கரை சேர முடியும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை வளையங்குளம் பகுதியில் ஆகஸ்ட் 20ல் நடைபெறவுள்ள அதிமுக மாநில மாநாடு தொடர்பான முன்னேற்பாடு பணிகளை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு, ‘காக்கைக்கு தன் குஞ்சும் பொன் குஞ்சு தான். அதனால் அண்ணாமலைக்கு பாஜக பெரிதாக தான் தெரியும். அதிமுகவை வெல்ல எவனாலும் முடியாது. அதிமுகவை நம்பி வருகிறவர்களை கரை சேர்ப்போம். எல்லோரும் நீச்சல் அடிக்கலாம். ஆனால், அதிமுகவுக்கு தான் எப்படி கரை சேர வேண்டும் என்பது தெரியும்’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘ஆளுநர் ஒரு கட்சியின் மாநில பிரதிநிதி போல பேசி வருகிறார். அவராக பேசுகிறாரா அல்லது அவரை யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா என தெரியவில்லை. அவர் பேசும் அரசியல் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளுநரை ஆளும்கட்சி விமர்சனம் செய்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளும்கட்சி – ஆளுநர் மோதல் காரணமாக தமிழக மக்கள் நல திட்டங்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும்’ என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *