தமிழ் மாநில பெண்கள் இயக்கம் சார்பில் சர்வதேச பெண்கள் தின விழா, தேனி வசந்தம் மஹாலில் இன்று (மார்ச் 10) காலை 10:00 மணிக்கு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, தமிழ் மாநில பெண்கள் இயக்க தலைவி பி.சரிதா வரவேற்றார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் கே.ராஜ்மோகன் தலைமை வகித்து, குத்து விளக்கேற்றினார். ஆண்டிபட்டி ஆரோக்கிய அகம் இயக்குனர் சாபு சைமன் ‘ பெண்ணே பேராற்றல்’ நூல் அறிமுகம் செய்து வைத்தார். நூலாசிரியர் ப.திருமலை ஏற்புரை வழங்கினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.வெண்மணி மகளிர் தினம் குறித்து சிறப்புரையாற்றினார்.
வருஷநாடு வசந்தம் சொசைட்டி இயக்குனர் கே.குணசேகரன், சமம் குடிமக்கள் இயக்கம் வழக்கறிஞர் ராஜன், தர்மத்துப்பட்டி ஷெர்டு அமைப்பின் இயக்குனர் ஆர்.அழகர்சாமி, சின்னமனூர் எம் எம்எஸ்., அமைப்பின் பொருளாளர் கே.தேவானந்த பிரபா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கூடல் கலைக்கூடம், மதுரை மற்றும் தேனி மாவட்ட பெண்கள் அமைப்புகள் சார்பில் பரதம், பாட்டு உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தமிழ்நாடு மாநில பெண்கள் இயக்கம், வழி நடத்துனர் வி.ரோஸ்லின் நன்றி கூறினார்.
தமிழ் மாநில பெண்கள் இயக்கம் உறுப்பு அமைப்புகளான சங்கமம் பெண்கள் கூட்டமைப்பு (தேனி), சக்தி பெண்கள் கூட்டமைப்பு (போடி), மறுமலர்ச்சி பெண்கள் கூட்டமைப்பு (பெரியகுளம்), எழுச்சி பெண்கள் கூட்டமைப்பு (சின்னமனூர்), தேன் சுடர் பெண்கள் கூட்டமைப்பு (ஆண்டிபட்டி) சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.