தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட பி.டி.ஆர். வாய்க்கால் தெருவில் இயங்கி வரும் தனியார் பள்ளி அருகே, சாக்கடையில் கடும் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் அவலநிலை நிலவி வருகிறது.

இப்பகுதியில் உள்ள வாய்க்காலில் கழிவுநீர் பெருமளவில் கலந்து தேக்கமடைந்துள்ளதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு பள்ளி குழந்தைகளுக்கு கொடிய நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுவதால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீது கழிவுநீர் தெளிப்பது மட்டுமன்றி, பின்னால் அமர்ந்து செல்லும் குழந்தைகள் மற்றும் பாதசாரிகள் மீதும் கழிவுநீர் சிதறி பெரும் சிரமத்திற்கு ஆளாக்குகின்றது. மேலும், அப்பகுதியை சேர்ந்த முதியவர்கள் கழிவுநீரை கடக்க முடியாமல் நடந்து செல்ல சிரமப்பட்டு தவித்து வருகின்றனர்.
எனவே, பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர் இச்செய்தியை உடனடியாக தன் கவனத்தில் எடுத்து,சின்னமனூர் நகராட்சி அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்து, போர்க்கால அடிப்படையில் பணியாளர்களை நியமித்து இந்த அடைப்புகளை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், கழிவுநீரை உடனடியாக அகற்றி, அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட வேண்டும் என்றும், இது போன்ற பாதிப்புகள் இனி வருங்காலங்களில் ஏற்படாதவாறு நகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.




