மதுரை மல்லிகைப்பூவின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் புதிய இயக்கம் உருவாக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண்பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் 2023 – 2024ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட்டில், மதுரை மல்லிகைப் பூ உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் ரூ.7 கோடியில் புதிய இயக்கம் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மல்லிகையானது மதுரை மட்டுமன்றி விருதுநகர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை ஆகிய இடங்களில் 4,300 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இத்தொகுப்பில் மல்லிகை உற்பத்தியை மேம்படுத்துவதோடு, சந்தை வாய்ப்புகளும் மேம்படுத்தப்படும். குறிப்பாக பருவமில்லா காலங்களில் உற்பத்தியை உறுதி செய்யப்படும். ஐந்து ஆண்டுகளில் தொடர் திட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்குத் தேவையான தரமான மல்லிகைச் செடிகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உற்பத்தி செய்து உரிய காலத்தில் வழங்கிட வகை செய்யப்படும். மல்லிகைப்பூ சாகுபடிகள் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உரிய காலத்தில் நடவு செய்யவும் பயிர் பாதுகாப்பு மேலாண்மை மேற்கொள்ளவும் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனை வழங்குவதற்காக ஆண்டுதோறும் செயல்படுத்தப்படும். வரும் ஆண்டில் இத்திட்டம் 7 கோடி ரூபாய் நதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.