காஞ்சிபுரம் மாவட்டம், குருவன்மேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் போதிய குடிநீர் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனர்.
காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், குருவன்மேடு ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, இதே கிராமத்தை சேர்ந்த, 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயில்கின்றனர். இந்த பள்ளியில், போதிய குடிநீர் வசதி இல்லாததால், குழந்தைகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து, மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:
கடந்த ஆண்டில் இருந்தே, பள்ளியில் குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது. கடந்த 12ம் தேதி, ஆறாவது முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், நேற்று முன்தினம், ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ – மாணவியருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. குடிநீர் பிரச்னை இந்த ஆண்டு இருக்காது என நினைத்து, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினோம். ஆனால், பிரச்னை சரி செய்யப்படவில்லை. குறிப்பாக, பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட பின், தட்டு மற்றும் கைகளை கழுவக் கூட தண்ணீர் இல்லை என, குழந்தைகள் கூறுகின்றனர்.
தண்ணீர் பிரச்னையை சரி செய்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.