இபிஎஸை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொண்டால் ஓபிஎஸை சேர்த்துகொள்வோம் என முன்னாள் அமைச்சர் செல்லூர்கே.ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோவில் பாப்பாகுடி, சிக்கந்தர் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி கூடுதல் கட்டிடங்களை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது
“அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதை அடுத்து அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒற்றை தலைமை வேண்டும்; இரட்டை குதிரையில் சவாரி செய்தால் அதிமுகவின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று அனைத்து நிர்வாகிகளும் ஒரு சேர முடிவெடுத்து, எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக ஆக்கி உள்ளோம்.
என்னை பொறுத்தவரை, இந்த கட்சியில் இருந்து ஒரு தொண்டனும் வெளியே செல்லக்கூடாது. புரட்சித்தலைவி ஜெயலலிதாவை காளிமுத்து பேசாத பேச்சா..?.
அது போல, பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, கண்ணப்பன், ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்களும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஆனால், புரட்சித்தலைவி அம்மா, அவர்களையும் ஏற்றுக்கொண்டு கழகத்தில் பதவிகள் வழங்கினார்.
அதுபோல தற்போது அதிமுகவை விட்டு விலகி இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொண்டால், மீண்டும் அதிமுகவில் இணைந்து பணியாற்றுவது குறித்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுப்பார்.கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் ஏற்படுத்தக்கூடிய உடன்பாடாகும் அதிமுக கூட்டணியை பொறுத்த வரை அந்தக் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் கேட்கும் தொகுதி எண்ணிக்கையை பொருத்து அந்த நேரத்தில் முடிவு செய்யப்பட்டு எங்கள் கூட்டணியில் எந்த கட்சிகள் இடம் பெறும் என்பது முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.