புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து வேளாண்மை செழிக்க வேண்டி கரகம் மற்றும் முளைப்பாரி எடுப்பு திருவிழா, ஒன்பது தினங்களாக திருநங்கைகள் விரதமிருந்து முளைப்பாரி போட்டு கரகத்தை அலங்காரம் செய்து வைத்த நிலையில் ஆயிரக்கணக்கான பெண்கள் கரக மற்றும் முளைப்பாரியை எடுத்து மேல தாளங்கள் முழங்க ஊர்வலமாக ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் அப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இந்தக் கோயிலின் திருவிழா கடந்த வாரம் பூச் சொரிதலுடன் தொடங்கியது.
இன்று சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி, சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பெண்கள் கரகம் மற்றும் முளைப்பாரி எடுப்பு திருவிழாவில் கலந்துகொண்டு முத்துமாரி அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

குறிப்பாக திருநங்கைகள் கடந்த ஒன்பது தினங்களாக விரதம் இருந்து வந்து முளைப்பாரி பயிரிட்டு கரகத்திற்கு அலங்காரம் செய்து வைத்திருந்த நிலையில் கல்லாலங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலிலிருந்து கரக மற்றும் முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு ஆலங்குடியின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க கும்மியடித்தும் குலவையிட்டும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் முன்பாக வைத்து வழிபாடு நடத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
இந்த ஆண்டு நல்ல மழை பெய்து வேளாண்மை செழிக்க வேண்டிய நோய்நொடியின்றி மக்கள் வாழவும் நடைபெற்ற இந்த முளைப்பாரி எடுப்பு திருவிழாவில் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் முளைப்பாரியை சுமந்தவாறு ஊர்வலமாக வந்த காட்சி காண்பவர்களை கவர்ந்தது.





