செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவையொட்டி வரும் 28-ம் தேதி, சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை ’44வது செஸ் ஒலிம்பியாட் 2022′ போட்டி நடக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். போட்டி முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் வேலு, மெய்யநாதன், மதிவேந்தன் ஆகியோர் முதல்வரிடம் எடுத்துரைத்தனர்.
தொடக்க விழாவையொட்டி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வரும் 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜூலை 28-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.