• Fri. Apr 26th, 2024

வரலாற்று சாதனை படைத்த வைகை எக்ஸ்பிரஸ்!

Byகுமார்

Mar 6, 2022

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட, நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் பயணம் செய்து குறைந்த நேரத்தில் சென்னையைச் சென்றடைந்தது வைகை எக்ஸ்பிரஸ். ஏறக்குறைய 44 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சாதனையை வைகை எக்ஸ்பிரஸ் முறியடித்திருப்பதாக ரயில் ஆர்வலர்கள் பெருமிதம் அடைந்துள்ளனர்.

மதுரையிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து மதுரைக்கும் பகல் நேர விரைவு ரயிலாக பயணிகளுக்குப் பெரும் சேவையாற்றி வரும் வைகை எக்ஸ்பிரஸ், கடந்த 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் துவக்கி வைக்கப்பட்டது. தற்போது வரை 44 ஆண்டுகளாக மதுரை மக்களின் ரயில் பயணத்திற்குப் பெரும் சேவையாற்றி வருகிறது.

ஒவ்வொரு நாளும் மதுரையிலிருந்து வழக்கமாக காலை 7.05 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.30 மணிக்கு சென்னையைச் சென்றடையும். மொத்த பயண நேரம் 7 மணி 25 நிமிடங்கள். அதேபோன்று சென்னையிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட்டு, இரவு 9.15 மணிக்கு வந்து சேரும். மொத்த பயண நேரம் 7 மணி 35 நிமிடங்கள்.

இந்நிலையில் நேற்று (03/03/22) மதுரையிலிருந்து காலை 7.05 மணிக்குப் புறப்பட வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ், இயந்திரக் கோளாறு காரணமாக காலை 7.26க்குப் புறப்பட்டது. ஆனால் சென்னைக்கு சென்றடைய வேண்டிய வழக்கமான நேரமான பிற்பகல் 2.30க்கு முன்னரே 2.07க்கு சென்னை எழும்பூரைச் சென்றடைந்து, மதுரை-சென்னை இடையேயான 497 கி.மீ. தூரத்தை 6 மணி 40 நிமிடங்களில் கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து ரயில் ஆர்வலர் அருண்பாண்டியன் தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், ‘இந்திய ரயில்வேயில் இந்த பயண தூரம் வரலாற்று சாதனையாகும். மேலும் வைகை எக்ஸ்பிரஸ் அது துவங்கப்பட்ட நாளான 1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் 7 மணி நேரம் 5 நிமிடங்கள் ஓடி சாதனை படைத்திருந்த நிலையில், வைகை எக்ஸ்பிரஸ்க்கு என்று ரயில்வேயால் நிர்ணயம் செய்யப்பட்ட அதே 110 கி.மீ. வேகத்தில் நேற்று 6 மணி 40 நிமிடங்களில் சென்னை எழும்பூரைச் சென்றடைந்தது வரலாற்று சாதனையாகும்.

வடமாநிலங்களில் சில எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு மணிக்கு சராசரியாக 130 கி.மீ. நிர்ணயம் செய்யப்பட்டு, ஓடிக் கொண்டிருக்கின்றன. தற்போது எக்ஸ்பிரஸ் ரயில்களின் பயண நேரத்தைக் குறைப்பதற்கு ரயில் பயணிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். நேற்றைய தினம் வைகை எக்ஸ்பிரஸ்சின் நிர்ணயிக்கப்பட்ட பயண நேரத்திலும் நிர்ணயிக்கப்பட்ட வேகத்திலும்கூட குறைந்த நேரமானதற்கு மிக முக்கியக் காரணம், தென்னக ரயில்வேயின் மதுரை, திருச்சி மற்றும் சென்னைக் கோட்டங்களின் நிர்வாக மற்றும் தொழில்நுட்த் திறமையே அடிப்படைக் காரணம். 300 கி.மீ தூரத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் 25 நிமிட தாமதத்தைச் சரி செய்து தெற்கு ரயில்வே சாதனை படைத்திருக்கிறது. ரயில்வேயின் அனைத்து துறைகளுடைய ஒருங்கிணைப்பின்றி இது சாத்தியமில்லை’ என்றார்.

சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் 7 மணி நேரமும் சென்னையில் இருந்து மைசூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் 497 கிலோ மீட்டர் தூரத்தை 7 மணி நேரமும் கடக்கின்றன. ஆனால் வைகை எக்பிரஸ் விட இந்த ரயில்களில் நிறுத்தங்கள் மிக குறைவாகும். தமிழ்நாட்டில் ஓடும் இந்த ரயில்களோடு ஒப்பிடும்போது வைகை எக்ஸ்பிரஸ் சாதனைக்குரிய தொடர்வண்டி ஆக தன் பெருமையை இன்றும் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *