தேனி மாவட்டம் வைகை அணை முழு கொள்ளவை எட்டியதால் அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியை தாண்டி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் மற்றும் வைகை அணையை ஒட்டியள்ள நீர்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, வெள்ளிமலை, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாகவும், வெளியேறும் உபரிநீரும் சேர்ந்து வைகை ஆற்றின் நீரின் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது
இதன் காரணமாக மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் யானைக்கல் தரைப்பாலம் முழுமையாக நீரில் மூழ்கியது. இதனையடுத்து தரைப்பாலத்தில் பொதுமக்கள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ள நிலையில் வைகை ஆற்றில் ஓரங்களில் உள்ள சாலைகளுக்கு வெள்ள நீர் வரத்தொடங்கிய நிலையில் வாகன ஓட்டிகள் அலட்சியமாக வெள்ள நீரை கடந்துசெல்லும் நிலை உள்ளது.இதனையடுத்து மதுரை வைகையாற்று பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் கால்நடைகளை பாதுகாப்பு பராமரிக்கவும், கால்நடைகளை ஆற்றில் இறக்கிவிட வேண்டாம் எனவும், நீர்நிலைகளின் அருகில் கால்நடைகளை கட்டிவைக்க வேண்டாம் எனவும், மழை பெய்யும் பகுதிகளில் கால்நடைகளை மின்கம்பங்களில் கட்ட வேண்டாம் எனவும், தொழுவங்களை பாதுகாப்பாக அமைத்துகொள்ளவும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் காவல்துறையினர் ஒலிப்பெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.