திருப்பூர் அருகே செல்போன் டவர் மீது ஏறிய குடிபோதை ஆசாமி போலீசாருக்கு மிரட்டல் விட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே அப்பியாயிபாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கார்த்திகேயன்(30). இவர் சனிக்கிழமை மது அருந்தி விட்டு, டூவீலரில் வந்தார். அப்போது கருக்கன்காட்டுப்புதூர் பகுதியில் நிறுத்தி பொதுமக்களை தகாத வார்த்தை பேசி தகராறு செய்துள்ளார்.
இதையறிந்த போலீசார் டூவீலரை பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர். இதையடுத்து, நேற்று மதியம் மீண்டும் மது அருந்தி விட்டு போலீஸ் நிலையத்திற்கு சென்ற கார்த்திகேயன் டூவீலரை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு போலீசார் வாகனத்தை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்துள்ளதால், அங்கு சென்று கேட்டு வாங்குமாறு கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த கார்த்திகேயன் பெருமாநல்லூர் சந்தைபேட்டை அருகில் உள்ள செல்போன் டவரில் ஏறி உடனடியாக தனது வாகனத்தை கொடுக்காவிட்டால் கீழே குதித்து விடுவதாக கூறி மிரட்டல் விடுத்தார். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, 3 மணி நேர போராட்டத்திற்கு பின் அவரை மீட்டனர் இச்சம்பவம் பெருமாநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.