

சட்டமன்ற தேர்தலில் வேட்பு மனுவில் தனது முழுமையான சொத்து தகவலை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களை தகவல்களைத் தவறாக தெரிவித்ததாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம், இந்த புகார் குறித்து முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாதோடு, காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மனு வரும் திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது.

