தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். எவ்வித அறிவிப்புமின்றி எடப்பாடி பழனிசாமி திடீரென பயணம் மேற்கொள்வது கவனம் பெற்றுள்ளது. ஏனெனில் அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான கூட்டணிகள் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி அமையலாம் என்று கூறப்படுகிறது. சேலத்தில் அண்மையில்,பாஜகவுடன் கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு, “எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதால் தேர்தல் நெருங்கும்போது நாங்களே அழைத்துச் சொல்லுவோம்.” என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார் இந்நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய முதல்வர் ஸ்டாலின், “சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. டெல்லி சென்றுள்ள அவர் அங்கு யாரை சந்திக்கிறார் என்ற செய்தியும் எங்களுக்கு வந்திருக்கிறது. டெல்லியில் சந்திப்பவர்களிடம் இருமொழிக் கொள்கை பற்றி இபிஎஸ் பேச வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெறுபவர்கள் நாங்கள் அல்ல.” என்றார்.








