

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகில் ஆப்கானிஸ்தான் அமைந்துள்ளது. இங்கு அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 9-ம் தேதி ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவானது. இதனைத் தொடர்ந்து, கடந்த 13-ம் தேதி மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இன்று (மார்ச் 21) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) அளித்த தகவலின் படி, இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 1 மணியளவில் காபுல் நகரத்திற்கு அருகே ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது ரிக்டர் அளவு 4.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 160 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

