• Thu. Jun 25th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் முதலமைச்சர் விஜய்க்கு பெற்றோர் நன்றி..,

ByPrabhu Sekar

Jun 25, 2026

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது வீரமரணம் அடைந்து, மரணத்திற்குப் பிறகு அசோக சக்கரா விருது பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தைப் போற்றும் வகையில், தாம்பரம் ரயில் நிலையம் முதல் வேளச்சேரி வரை உள்ள சாலைக்கு “மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை” என பெயர் சூட்டி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதிகளுக்கான தளபதி லெப்டினெண்ட் ஜெனரல் ஸ்ரீ ஹரி, முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து, நாட்டிற்காக உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயரை அந்தச் சாலைக்கு சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். அந்தக் கோரிக்கையை உடனடியாக ஏற்ற முதலமைச்சர் விஜய், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக மனிதவள மேம்பாடு மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை அமைச்சர் சரத்குமார், தாம்பரம் அருகே சந்தோசபுரத்தில் வசிக்கும் மேஜர் முகுந்த் வரதராஜனின் பெற்றோரை நேரில் சந்தித்து வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சரத்குமார், இந்திய ராணுவத்தின் கோரிக்கையை மதித்து, நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த மாவீரரின் நினைவை நிலைநிறுத்தும் வகையில் முதலமைச்சர் விஜய் உடனடியாக அரசாணை வெளியிட்டது பெருமைக்குரிய நடவடிக்கை என்றும், இனி அந்தச் சாலை “மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை” என்ற பெயரிலேயே அழைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்த அறிவிப்பால் மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினர் நெகிழ்ச்சி அடைந்ததுடன், முதலமைச்சர் விஜய்க்கும் தமிழக அரசிற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.