விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜயரங்கபுரம் ஊராட்சி துரைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்த கோபி கிருஷ்ணா என்பவர் அக்னி பாத் ராணுவ வீரராக நாசிக் பகுதியில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இவர் நேற்று விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் தங்கள் கிராமத்திலேயே முதல் முறையாக ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய கோபி கிருஷ்ணனை பாராட்டி கௌரவிக்கும் விதமாக ஊர் பொதுமக்கள் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்து கிராமத்தில் மையப் பகுதியில் அமைந்த மைதானத்தில் அவருக்கு மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து ராஜகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு தடபுடலாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் கிராம பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

இதேபோன்று வி.மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த வடிவேல் என்பவரது மகன் வசந்தகுமார் அக்னி பாத் வீரராக செகந்திராபாத்தில் பயிற்சி முடித்து காஷ்மீரில் பணியாற்றி வருகிறார்.
இவரும் அவரது கிராமத்தில் முதல் முறையாக ராணுவத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இவரை பாராட்டி கெளரவிக்கும் போது விதமாக வான வேடிக்கை நடத்தி வசந்தகுமாருக்கு மாலை மரியாதை அளிக்கப்பட்டு ஊர் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்ற விதம் பார்ப்பவரை நெகிழ்ச்சி அடையச் செய்தது. காளியம்மன் கோவில், பிள்ளையார் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு உறவினர்கள், குடும்பத்தினர்கள், உற்சாகமாக வரவேற்றனர்.




