• Thu. Apr 25th, 2024

குடமுழுக்கு நடக்கும் கோபுரத்தின் மீது கருடன் வட்டமிடும் காரணம் தெரியுமா?

தமிழகம் முழுவதும் நேற்றைய தினம் பல ஆலயங்களில் குடமுழுக்கு நடைபெற்றது. கோவில் கோபுரத்தின் மீதுள்ள கலசத்தின் மீது புனித நீரால் அபிஷேகம் செய்யும் முன்பாக கருடன் வட்டமிட்டு ஆசிர்வதித்தது.

அதைக்கண்டு பலரும் பக்தி பரவசமடைந்தனர். எந்த கோவிலாக இருந்தாலும் கருடன் வட்டமிட்ட பின்னரே குடமுழுக்கு நடைபெறுவது வழக்கம். கருடன் ஏன் கோவில் கோபுரத்தின் மீது வட்டமிடுகிறது என்று பார்க்கலாம்.

கருடன் பட்சி ராஜன். பெருமாளின் வாகனம். பெருமாள் ஆலயங்களில் கருட வாகனத்தில் எழுந்தருளும் காட்சியைப் பார்க்கவே ஏராளமானோர் கூடுவார்கள். குடமுழுக்கு நடைபெறும் போது அங்கு ஆறுகாலயாக பூஜைகள் நடைபெறும். அந்த யாக பூஜைகள் திருப்தியாக இருந்தது என்பதை உணர்த்தவும் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றுள்ள பக்தர்களுக்கு ஆசி வழங்கவுமே கருடபட்சிகள் கோபுரத்தின் மீது வட்டமிடுகின்றன.

நம் நாட்டில், எந்தக் கடவுளுக்குரிய ஆலயங்களின் குடமுழுக்கு விழா நிகழ்ச்சியிலும், குடமுழுக்கு நடைபெறும் நேரத்தில் வானத்தில் கருடன் வட்டம் இடுகிறதா என்பதை மிகவும் முக்கியமாகப் பார்ப்பார்கள் வடபழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு நடைபெற்ற போது நான்கு கருடன்கள் ஒன்றாக வட்டமிட்டதைப் பார்த்து கூடியிருந்த அனைவரும் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என்று முழுக்க மிட்டனர்.

அதன் பிறகே குடமுழுக்கு நடைபெற்றது. கோபுரத்தின் மீதுகருடன் வட்டம் இடாமல் இருந்தால், யாகத்தில் ஏதாவது குறைபாடு இருக்கலாம் என்று முடிவு செய்வர். கருடன் வட்டமிடும் வரை காத்திருப்பார்கள்.

வானத்தில் கருடனைப் பார்த்த பின்னரே கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி அபிஷேகம் செய்வார்கள்.இதற்கு காரணம் கருடன் வேத படிவமானவன். வேத மந்திரங்களை ஓதி செய்யப்படும் ஒரு சடங்கில் வேத வடிவமான கருடன் எழுந்தருள்வது தானே முறையாகும்.

ஆனால் சரியான வேத வேள்வி நடக்காத போது அவ்விடத்தில் அவனுக்கு என்ன வேலை? எனவேதான் கருட தரிசனத்திற்கு பிறகே திருக்குட முழுக்கு நடத்தப்படுகிறது.
ஆயிரக்கணக்கான மந்திரங்களில் கருட மந்திரமான கருட பஞ்சாக்ஷரிக்குத் தனிச் சிறப்பு

உண்டு.தத்புருஷாய வித்மஹே
ஸுவர்ண பக்ஷாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்


என்று சொல்லி கருடனை வணங்கலாம்.கருடனை வணங்கினால் சகலவிதமான நன்மைகளும் பெருகும். கண் பார்வை குறைபாடுகள் அகலும் பகையும் பிணியும் நீங்கும். செல்வவளம் கொழிக்கும். பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை. ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுணம்.


பிறரை வசியம் செய்வது, மயங்க வைப்பது, பகைவர்களை அடக்குவது, அந்தரத்தில் உலவுதல், நெருப்பிடையே பயம் இல்லாமல் புகுந்து செல்வது, இந்திரஜாலம் காட்டுவது, படிப்பில் நல்ல தேர்ச்சி, நினைவாற்றல், தேர்வில் வெற்றி ஆகியவற்றை கருடாழ்வாரை மனதில் நினைத்து வழிபடுவதன் மூலமாகப் பெறமுடியும் என்று பத்ம புராணம் கூறுகிறது.

கருட தண்டகத்தை பாராயணம் செய்து வந்தால் எதிரிகள் தொல்லை ஒழிந்து போகும். நோய் நொடிகள் அண்டாது. விஷ ஐந்துக்களால் எந்த விதமான துன்பமும் ஏற்படாது என்பது நம்பிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *