கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில், தை தேர் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, மதுரை, சென்னை மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பக்தர்கள் அய்யாவுக்கு சுருள் ஏய்ப்பு நிகழ்சிகாக வாழை தார்கள், வெற்றிலை, பூக்கள், தேங்காய் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை கொண்டு வந்து தேரில் கொடுத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி அமைந்துள்ளது . இங்கு வருடம்தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த வருட தை திருவிழா கடந்த 14-ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் ஒவ்வொரு நாளும் காலை, மாலை பணிவிடையும் மதியம் உச்சி படிப்பும், இரவு அய்யா மயில் வாகனம் மற்றும் வெள்ளை சாற்றி அன்ன வாகனத்தில் பவனி வருதலும், நான்காம் திருவிழாவில் இரவு வைகுண்டசுவாமி கருட வாகனத்தில் பவனி வருதலும், ஐந்தாம் திருவிழாவில் இரவு அய்யா வைகுண்டசுவாமி பச்சை சாற்றி துளசி சப்பர வாகனத்தில் பவனி வருதலும், ஆறாம் திருவிழாவில் இரவு சர்ப்ப வாகன பவனியும், 7-ம் திருவிழாவில் இரவு கருட வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
10 ஆம் நாளன இன்று தைத் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.