• Tue. May 14th, 2024

இன்று சதுரகிரிமலையில் பக்தர்கள் மலைக் கோவிலுக்கு செல்ல அனுமதி கிடையாது…

ByKalamegam Viswanathan

Jul 18, 2023

சதுரகிரிமலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மலைக் கோவிலில் இருந்து பக்தர்கள் பாதுகாப்பாக அடிவாரப் பகுதிக்கு வந்து கொண்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் – வத்திராயிருப்பு அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் சென்று சுந்தரமகாலி்கம் சுவாமியை தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில் மலைப் பாதையில் உள்ள நாவலூற்று பகுதியில் நேற்று மாலை திடீர் காட்டுத்தீ பரவியது. இதனால் பக்தர்கள் பாதுகாப்பு கருதி சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் வளாகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். இன்று அதிகாலை வரை காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது. தற்போது காட்டுத்தீ முழுமையாக அணைக்கப்பட்டு கட்டுக்குள் வந்தது. இதனையடுத்து மலைக் கோவிலில் தங்க வைக்கப்பட்டிருந்த பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் பாதுகாப்பாக அடிவாரப் பகுதிக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். வழக்கமாக அமாவாசைக்கு மறுநாளும் பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இன்று ஏராளமான பக்தர்கள் மலைக் கோவிலில் இருந்து அடிவாரப் பகுதிக்கு வந்து கொண்டிருப்பதால், மலையேறும் பக்தர்கள் சிரமப்படுவார்கள் என்றும், காட்டுத்தீ மீண்டும் ஏற்பட்டால் பக்தர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்பட்டு விடும் என்ற அச்சம் இருப்பதால் இன்று மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைமீது ஏற்பட்ட காட்டுத்தீ குறித்து விவரம் தெரியாமல், இன்றும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று நம்பிக்கையுடன் சதுரகிரிமலைக்கு, ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். வனத்துறையின் இந்த அறிவிப்பால் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *