விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம் பண்ணையில் பராசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை பொங்கல் திருவிழா கடந்த மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் அம்மன் அலங்கரிக்கப்பட்ட ரிஷபம், சிம்மம், குதிரை, காமதேனு, அன்னபட்சி, உள்ளிட்ட வாகனங்களில் எழுந்துருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.நேற்று எட்டாம் நாள் திருவிழாவில் அன்னை பராசக்தி மாதர் சங்கம் சார்பில் ரத வீதியின் வழியாக பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து அம்மன் காமதேனு வாகனத்தில் பழைய ஏழாயிரம் பண்ணையில் உள்ள மண்டகப்படியில் எழுந்துருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஒன்பதாம் நாள் திருவிழா கயிறு குத்து திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

பராசக்தி மாரியம்மன் கோவில் வளாகத்தில் சென்னை முருகன் பெயிண்ட் கம்பெனி வைரவ சாமி பாண்டிய நாடார் தவமணி அம்மாள் குடும்பத்தினர் சார்பில் பொங்கல் வைக்கும் வைபவ நிகழ்சியை முன்னிட்டு பக்தர்கள் அனைவருக்கும் பொங்கல் பானை மற்றும் பொங்கல் வைப்பதற்கான தேவையான பொருட்களை வழங்கினார்கள். அதனை பெற்றுக் கொண்டு கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.






