வேலூர் மாவட்டத்தில் புதிய தலைமுறை செய்தியாளர் மீதான தாக்குதலைக் கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே இராமாலை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் செய்தி சேகரிக்கச் சென்ற புதிய தலைமுறை செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது அங்கிருந்த சிலர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை கண்டித்து சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் உட்பட பல்வேறு அமைப்பினர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக செய்தியாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்; இதுபோன்ற தாக்குதல்களை தடுத்து நிறுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக உத்தரப் பிரதேச மாநிலம் இந்தூரில் விவசாயிகள் போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் கொல்லப்பட்ட செய்தியாளருக்கு இரங்கல் தெரிவித்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.