


சென்னை- பெங்களூர் பரபரப்பான ஆட்டத்தின் கடைசி பந்து வரை நீடித்த ஆட்டத்தில், பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சென்னை அணி 12 ரன்கள் மட்டுமே எடுத்தது. முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. பதிலுக்கு ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மாத்ரே 48 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து அதிகபட்சமாக ஸ்கோர் செய்தார். ரவீந்திர ஜடேஜா 45 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

பெங்களூரு அணி நிர்ணயித்த 214 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை அணியின் ஆயுஷ் மாத்ரே – ஷேக் ராஷித் ஜோடி அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் இணைந்து 27 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தனர். ஐந்தாவது ஓவரில் ஷேக் ராஷித் 14 ரன்களிலும், ஆறாவது ஓவரில் சாம் கரன் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர், மூன்றாவது விக்கெட்டுக்கு ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்து ஆயுஷ் மாத்ரே ஒரு சிறப்பான கூட்டணியை அமைத்தார். இந்த ஜோடி சென்னை அணிக்கு வெற்றி நம்பிக்கையை அளித்தது.
ஆனால், 17வது ஓவரின் இரண்டாவது பந்தில் ஆயுஷ் மாத்ரேவும், அடுத்த பந்திலேயே டெவால்ட் பிரெவிஸும் ஆட்டமிழந்தனர். ரவீந்திர ஜடேஜாவுக்கு துணையாக வந்த மகேந்திர சிங் தோனி (12 ரன்கள்) விரைவாக ஆட்டமிழந்தார். வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஷிவம் துபே ஒரு சிக்ஸர் அடித்து நம்பிக்கையளித்தார்.
ஆனால், அடுத்தடுத்த பந்துகளில் பெங்களூரு பந்துவீச்சாளர் யஷ் தயால் பெரிய ஷாட்களுக்கு வாய்ப்பளிக்காததால் சென்னை அணி மீண்டும் தோல்வியைத் தழுவியது. பெங்களூரு அணி சார்பில் லுங்கி என்ங்கிடி 3 விக்கெட்டுகளையும், குணால் பாண்டியா மற்றும் யஷ் தயால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

