தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்ததால், ஓராண்டுக்கும் மேலாக மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகளை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு, தனிமனித இடைவெளியுடன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள மாணிக்கம்பாளையம் அரசு பள்ளி மாணவி ஒருவருக்கும், ஆசிரியருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
தற்போது தஞ்சையிலுள்ள குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பயிலும் மாணவிகள், பேராசிரியர்கள் அலுவலர்கள் என மொத்தம் 928 பேருக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், மாணவி ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது
. இதனையடுத்து அந்த மாணவியோடு, அவருடன் வகுப்பறையில் இருந்த 30 மாணவிகளும் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கல்லூரி வளாகத்தை கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.